*கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
கரூர் : கரூர் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் தீயால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனியை தாண்டியதும் குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் அனைத்து குப்பைகளும் வாகனங்கள் மூலம் இங்கு கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது.
சில சமயங்களில் காற்றின் காரணமாக குப்பை கிடங்கு தீப் பற்றி எரியும் போது இந்த சாலையின் வழியாக பயணிக்கும் அனைத்து தரப்பு வாகன ஓட்டிகளும் கடும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீ பரவி எரிகிறது.
இதன் காரணமாக புகை அதிகளவு சாலையில் பரவுவதால் சாலையை கடந்து செல்லும் அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
