செங்கல்பட்டு: தமிழக அரசு மாற்று திறனாளிகளுக்கு வழங்கும் சிறப்பு செல்போன் கிடைக்காததால், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் முன்பு, நேற்று மாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பு நேற்று மாலை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் திரண்டனர். அவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு செல்போன் கடந்த ஒரு வருடமாக பலருக்கு வழங்கவில்லை. இதனால், 100க்கும் மாற்று திறனாளிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தமிழக அரசு அறிவித்தபடி, உடனே தங்களுக்கு அந்த செல்போனை வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.