சென்னை: டியுசிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ராஜன் சாமிநாதன் (எல்பிஎப்), பி.அன்பழகன் (ஐஎன்டியுசி), வி.கவியரசன் (ஜெஎம்எஸ்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு பண்டக சாலை(டியுசிஎஸ்) மிகவும் பழமை வாய்ந்தது. டியுசிஎஸ் மூலம் ரேஷன் கடைகள், மளிகை பிரிவுகள், எரிவாயு மற்றும் பெட்ரோல் நிலையங்கள், காய்கறி அங்காடிகள், மருந்து கடைகள் என மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழக அரசினால் ஆரம்பிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சியால் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகம் இன்று சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. இந்த அம்மா உணவகங்களுக்கு டியுசிஎஸ் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வரும் மளிகை பிரிவுகள், எரிவாயு கிளைகள், காற்கறி அங்காடிகள் மூலம்தான் தினசரி பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. அதன்படி மாதம் 4 கோடி வரை மளிகை, காய்கறி பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.