தேனி, பிப். 4: தேனி அருகே குன்னூரை சேர்ந்தவர் நாகராஜன் (47). தேனியில் உள்ள ஜவுளி கடையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜன.25ம் தேதி நிறுவனத்தின் பணத்தை தேனி- பெரியகுளம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் செலுத்த சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு இளம்பெண் தான் பண்த்தை செலுத்த உதவி செய்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய நாகராஜன் அப்பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை (ரூ.500 நோட்டுகள்) செலுத்துமாறு கூறியுள்ளார். அப்பெண்ணும் பணத்தை வாங்கி செலுத்தியுள்ளார். அப்போது ஒரு ரூ.500 நோட்டு மட்டும் ரிஜெக்ட் ஆகி வெளியே வந்துள்ளது. தொடர்ந்து மீதிப்பணம் ரூ.49,500ஐ செலுத்துவது போல் நடித்துள்ளார். பின்னர் மிஷினில் இருந்து ரசீது வரவில்லையே என நாகராஜன் அப்பெண்ணிடம் கேட்டதற்கு சில சமயங்களில் ரசீது வராது, ஆனால் கணக்கில் வரவு ஆகிவிடும் என கூறியுள்ளார். இதை நம்பி நாகராஜன் அங்கிருந்து புறப்பட்டு, கடை உரிமையாளரிடம் பணத்தை செலுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் உரிமையாளரின் கணக்கில் பணம் வரவு ஆகவில்லை. இதுகுறித்து நாகராஜன் ஜன.27ல் வங்கிக்கு சென்று புகார் அளித்தார். அதன்பேரில் ஏடியும்மில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை சோதனையிட்டதில் அப்பெண் பணத்தை நூதன முறையில் கையாடல் செய்தது தெரிந்தது. இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின்பேரில் தேனி எஸ்ஐ லதா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார்.