- கூட்டுறவு கடன் சங்கம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம்
- சென்னை மத்திய ரயில் நிலையம்...
சென்னை: பணியிடத்தில் பாலியல் தொல்லையில் சிக்கியதுடன், அதிகாரிகளால் பழிவாங்கப்பட்ட பெண் ஊழியருக்கு பணிக்கான பணப்பலன்களை வழங்குமாறு ரயில்வே தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ரயில்வே தொழிலாளர்கள் கடன் சங்கத்தில் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், 1994ல் பணியில் சேர்ந்தார். 1998ல் சங்கத்தின் உதவி செயலாளராக பதவியேற்ற நாககேசரி என்பவர் அந்த பெண்ணை தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரிவுக்கு மாற்றி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து சங்க தலைவரிடம் 2001 ஏப்ரலில் குமாரி புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த சங்க தலைவர் உடனடியாக நாககேசரியிடம் இருந்த அதிகாரத்தை எடுத்ததுடன், அவரது பிரிவுக்கு பெண் பணியாளர்களை நியமிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், 2001 ஜூலை மாதம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த நாககேசரி, மீண்டும் பணி ரீதியாக குமாரிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தேசிய மற்றும் தமிழக மகளிர் ஆணையம், சென்னை போலீஸ் கமிஷனர், ரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு புகார் மனுவை குமாரி அனுப்பியிருந்தார்.
அதன் அடிப்படையில் நிர்வாகம், 3 விசாரணை குழுக்களை அமைத்தது. இந்த குழு சங்க நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், குமாரி தரப்புக்கு போதிய வாய்ப்பு அளிக்காமலும் இருந்துள்ளது. 2003 ஜூன் 6ம் தேதி அவருக்கு எதிராக 7 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு மெமோ தரப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து விசாரிக்க அப்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருந்த நிர்மலா சீத்தாராமன், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத், ஓய்வு பெற்ற டிஜிபி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில், குமாரி கொடுத்த புகார் மீதான விசாரணையில் விசாகா வழக்கில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்த குழு, நாககேசரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக அவரது பணியிடத்தில் அமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த நிலையில், கடந்த 2023ல் பெண் ஊழியர் ஓய்வு பெற்றார். ஆனால், அவர் மீதான விசாரணை 2004லிருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், தனக்குரிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் சஸ்பெண்ட் காலத்திலிருந்து இதுவரை உள்ள நிலுவை தொகைகளையும் தருமாறு உத்தரவிடக்கோரி அந்த பெண் ஊழியர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாககேசரிக்கு சிறை தண்டனை வழங்கிய பிறகும் நாககேசரி மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், நாககேசரி மரணமடைந்துள்ளார்.2023ல் பெண் ஊழியர் பணி ஓய்வு பெற்றிருந்தும் அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை முடியவில்லை. அவர் மீது கடந்த 2003 மற்றும் 2004ல் தரப்பட்ட குற்ற குறிப்பாணைகள் காலாவதியாகிவிட்டன. அந்த பெண் ஊழியர் ஓய்வுபெற தகுதி பெற்றுள்ளார். எனவே, அவருக்கு அவர் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 சதவீத வட்டியுடன் அவரது பணப்பலன்களை 8 வாரங்களுக்குள் தர வேண்டும். அவருக்கு வர வேண்டிய நிலுவை தொகையையும் 8 வாரங்களுக்குள் தரவேண்டும். உரிய காலத்திற்குள் தரவில்லை என்றால் 9 சதவீத வட்டியுடன் தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
