×

சிறுபான்மையின மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக திமுக அரசு உள்ளது: அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்

சென்னை: இன்று (10.02.2026) சென்னை, மேடவாக்கம், காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி 50-வது ஆண்டு பொன்விழா நிறைவு நிகழ்ச்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தியோடு தொடங்கப்பட்டு, பொன்விழா ஆண்டு சிறப்பு மலரினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் முனைவர் கோவி. செழியன் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வெளியிட்டனர்.

இவ்விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது:-
சிறுபான்மையின மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக இவ்வரசு செயல்படுகிறது. 1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள், மேலும், 1990-ஆம் ஆண்டு அப்துல் ஜாபர் தலைமையில் சிறுபான்மையினர் நலக்குழு. 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம். 2007-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல இயக்ககம், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், இஸ்லாமிய சமுதாய உலமாக்களுக்கும். பள்ளி வாசலில் பணிபுரியம் மோதினார்களுக்கும் இலவச சைக்கிள் ஆகிய திட்டங்களை செயல்படுத்தினார்.

அவரின் வழித்தோன்றலாக, கர்நாடகாவில் இஸ்லாமியர் அணியும் உடை விவகாரத்தில் கலவரமாகியபோது, தன்னிகரில்லாத் தலைவர் முதலமைச்சரின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் இஸ்லாமியர் அணியும் ஹிஜாபை அனுமதித்தது. மேலும், சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் அலுவலகம். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக அதிக கடன்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறுபான்மையின மக்களுக்காக முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

மேடவாக்கம், காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, இன்று தனது 50-ஆம் ஆண்டு பொன்விழா நிறைவு நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிறுவனத்தின் விழாவில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். தமிழ்மொழிக்கு ஒப்பற்ற சேவையாற்றிய காயிதே மில்லத் அல்ஹாஜ் எம். முகமது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் விளைவாக உயர்கல்வி அனைவருக்கும் எட்டவேண்டும் என்ற இலக்குடன் இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு பலர் ஒன்றிணைந்து காயிதே மில்லத் மற்றும் சமூக அறக்கட்டளையை உருவாக்கி 1975-ம் ஆண்டு மீனம்பாக்கத்தில் வாடகை கட்டிடத்தில் 5 பாடப்பிரிவுகளுடன் 200 மாணவர்களைக்கொண்டு காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரியினை முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திறந்து வைத்தார்கள். 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் இக்கல்லூரி, தற்போது 7 வகையான பாடப்பிரிவுகளுடன் இருபாலர் கல்லூரியாக 2,000 மாணாக்கர்களுடன் சிறப்புடன் செயல்பட்டு, தற்போது பொன்விழாவினை நிறைவு செய்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுறவு, உருது, அரபிக் பாடப்பிரிவுகளில் இக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்று, பட்டம் பெறுவது பெருமைக்குரியது. குறைந்த கட்டணம், உயர்ந்த கல்வித் தரம் என்ற கொள்கையுடன், சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அரசு உதவி பெறும் சிறுபான்மைக் கல்வி நிறுவனமாக, கடந்த 50 ஆண்டுகளாக சமூக முன்னேற்றத்திற்கான கல்விச் சேவையை சிறப்புடன் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இக்கல்லூரியில் பெண்கள் தடையின்றி பயில முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட “புதுமைப் பெண்” திட்டத்தில் 618 மாணவிகளும், “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தில் 595 மாணவர்களும், “நான் முதல்வன்” திட்டத்தில் 1,400 மாணாக்கர்களும், கடந்த மாதம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட “உலகம் உங்கள் கையில்” மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 485 மாணாக்கர்களும் பயனடைந்துள்ளனர். மாணாக்கர்கள் இத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி, இந்தக் கல்லூரியின் மாணவர்கள் உலகத் தரத்தில் போட்டியிடக்கூடிய திறன் பெற்ற இளைஞர்களாக உருவாக வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு. பொன்விழா கொண்டாடும் இந்தச் சிறப்பான தருணத்தில், காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் கே.என் பாஷா, கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஜனாப் எம்.ஜி. தாவூத் மியாகான், OMEIAT தலைவர். ஜனாப் முஹம்மத் அஷ்ரப், South India Shelters Pvt. Ltd., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், Chennai CREDAI. தலைவர் ஜனாப் முஹம்மத் அலி, சிங்கப்பூர், ராயல் கிங்ஸ் குரூப், தலைவர், ஜனாப் சிராஜுத்தீன், கல்லூரி முதல்வர் முனைவர் மோ.அம்துல் தவாப், காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை இணைச் செயலாளர் ஜனாப். ஏ. ஷாஹல் ஹமீத் மற்றும் பேராசிரியர்கள், மாணாக்கர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dimuka government ,Minister ,Kovi ,Sezhiyan ,Chennai ,50th Anniversary Golden Jubilee Closing Ceremony ,Gayite Millat Adwar College ,Chief Minister of Tamil Nadu ,Golden Jubilee ,Special ,Floriculture ,Public Welfare ,Minister of State ,
× RELATED இடைக்கால பட்ஜெட் தொடர்பாக தலைமைச்...