×

ஒன்றிய அமைச்சர் பதவியை எதிர்ப்பார்க்கிறது தேமுதிக : அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்

திண்டுக்கல்: “தேமுதிகவுடன் தேசிய கட்சித் தலைமை பேசிக்கொண்டு இருக்கிறது. நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்” என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, “அமமுகவை தொடர்ந்து தேமுதிகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதிமுக கூட்டணிக்கு தலைமை வகித்தாலும் அணியில் புதிய கட்சிகளை அடுத்தடுத்து பாஜகவே சேர்த்து வருகிறது. அன்புமணியை தவிர எஞ்சிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பாஜக தலைவர்களை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தனர்.

தேமுதிகவுடன் பாஜக தேசிய தலைமையும் எல்.முருகனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிகவுடன் அதிமுக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தற்போது டெல்லியிலிருந்து பேசுகிறார்கள். எங்களிடம் அன்பாக உள்ளவர்களிடம் நாங்கள் பேசுகிறோம்; பாஜகவிடம் அன்பாக உள்ளவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். தேமுதிக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் என எதிர்பார்க்கிறோம். ஒன்றிய அமைச்சர் பதவியை எதிர்ப்பார்க்கிறது தேமுதிக. சிலர் மத்தியில் பொறுப்பு கேட்கிறார்கள், அதனால்தான் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறது. யார் சமைத்தால் என்ன? சாப்பாடும், கூட்டும் நம் இலைக்கு வந்தால் போதும். அதிமுக கூட்டணிக்கு 60 சதவீத மக்கள் வந்துவிட்டார்கள். எங்களுடன் இருந்த பெரிய மனிதர் செங்கோட்டையன், அவரை முதலிடத்தில் வைத்திருந்தோம். தற்போது செங்கோட்டையனை நான்காவது, ஐந்தாவது இடத்தில் உட்காரவைத்து விட்டனர், அவரது நிலை தாழ்ந்துவிட்டது. செங்கோட்டையன் விஜய்க்கு புரட்சி தளபதி பட்டம் கொடுத்ததை நினைத்து கண்ணீர்தான் விட வேண்டும்.”என்றார்.

Tags : Demutika ,Union Minister ,Adimuga ,former minister ,Dindigul Sinivasan ,Dindigul ,Nationalist Party ,Temuthiga ,minister ,Dindigul West District Executive Consultative Meeting ,
× RELATED ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில்...