சென்னை: கொத்தடிமைத் தொழிலாளர் முறையினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை, தி.நகரில் தொழிலாளார் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்னிலையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில்; தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற சீரிய முயற்சியுடன், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரால் விடுதலைச் சான்று வழங்கப்பட்டு, உடனடி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில், இவ்வரசு பொறுப்பேற்றது முதல், 944 தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக 2 கோடியே 56 இலட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், பல்வேறு துறைகளின் வாயிலாக மறுவாழ்வு நடவடிக்கைகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டுவரை 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்தது. முதலமைச்சர், வேலைவாய்ப்பின்மை, வறுமை இவற்றை போக்கும் வகையில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முன்னோடியாக உள்ளது.
இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு ஏராளமான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது என்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளின் மூலம் சுமார் 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த கள அலுவலர்களான ரஷ்மி ராணி, சார் ஆட்சியர், சிதம்பரம், கடலூர் மாவட்டம், சீ. கிஷன் குமார், சார் ஆட்சியர், சிதம்பரம், கடலூர் மாவட்டம், சு. ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர், திருவள்ளூர் மாவட்டம், மு. முகமது பைசல், வருவாய் கோட்டாட்சியர், கரூர் மாவட்டம், மு. சத்தீஷ் குமார், வருவாய் கோட்டாட்சியர், (மத்திய சென்னை), சென்னை மாவட்டம் ஜா. அஜிதா பேகம், வருவாய் கோட்டாட்சியர், திருப்பத்தூர் மாவட்டம், இ.அபிநயா, வருவாய் கோட்டாட்சியர், கடலூர் மாவட்டம், ரா. ஷீஜா, வருவாய் கோட்டாட்சியர், அரியலூர் மாவட்டம், திருவள்ளூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) M. வெங்கடாசலபதி, சென்னை, மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் S.இளவரசன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜெய வனிதா ஆகியோருக்கு அமைச்சர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கொ. வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் சி.அ.ராமன், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு துணை செயலாளர் / முதுநிலை சார்பு நீதிபதி ச.சந்தானகுமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் / சார்பு நீதிபதி S.P. கவிதா, சென்னை, தி.நகர் வட்டம், காவல் துறை துணை ஆணையர் வனிதா மற்றும் காவல் துறை துணை ஆணையர் குத்தாலிங்கம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் செ.ஆனந்த், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தொடர்புடைய பிற துறை அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

