×

கோதுமை திருடிய வழக்கில் 46 ஆண்டுகளுக்குப் பின் கைது: ம.பி.யில் ருசிகரம்

 

கார்கோன்: மத்திய பிரதேசத்தின் கார்கான் மாவட்டத்தின் பால்சமுண்ட் காக்கட் பகுதியில் உள்ள வயல் வெளியில் அறுவடை செய்து குவித்து வைக்கப்பட்டிருந்த 87 கிலோ கோதுமை கடந்த 1980ல் திருடு போனது. அப்போது ஒரு கிலோ கோதுமையின் விலையே ரூ.1.15தான். திருடு போன கோதுமையின் மதிப்பே வெறும் ரூ.100தான்.

ஆனால், அந்த காலத்தில் அது ஒரு பெரிய தொகை. இது திருட்டு தொடர்பாக அப்போது 20 வயதான சலீம் என்பவர் உட்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், சலீம் தலைமறைவாகிவிட்டார். அருகில் உள்ள தர் மாவட்டத்தில் இருக்கும் பாக் நகருக்கு சென்ற சலீம் மளிகைக் கடை நடத்தி வந்தார். இதற்கிடையில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்ததுடன், அவருக்கு எதிராக பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் மற்றொரு குற்றவாளியைத் தேடும் சைபர் செல் விசாரணையின் போது, பாக் நகரில் உள்ள அவரது கடையில் சலீம் அடையாளம் காணப்பட்டார். இதையடுத்து, தற்போது 66 வயதான சலீம் கைது செய்யப்பட்டார். விசாரணையில், “கோதுமை திருடி 46 ஆண்டுகள் ஆகிவிட்டது. இனியும் என்னை யார் தேடப்போகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால், சட்டத்தின் கரங்கள் நீளமானது என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது என்று அவர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். கைதான சலீம் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Khargone ,Balsamund Kakat ,Khargone district ,Madhya Pradesh ,
× RELATED கம்யூனிச சித்தாந்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: அமித்ஷா பேச்சு