தேனி, பிப்.3: சின்னமனூர் பகுதியில் ஒர்க் ஷாப்புகளில் வேலை பார்த்த 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் தெருவோரம் வாழும் குழந்தைகள், இடம்பெயர்ந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத குழந்தைகளை அடையாளம் கண்டு மீட்கும் நோக்கத்தில் புன்னகையை தேடி என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சியில் புன்னகையை தேடி நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. தேனி மாவட்ட போலீஸ் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் வக்கீல் சுரேஷ் குமார், தேனி சைல்டு லைன் இயக்குனர் முஹம்மது ஷேக் இப்ராஹிம், சின்னமனூர் எம்எம்எஸ் நிர்வாக இயக்குனர் தேவானந்த பிரபு, மாவட்ட நன்னடத்தை அலுவலர் அன்னலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் கிரிஜா, தொழிலாளர் நல ஆய்வாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.