வேதாரணயம்: மாமியார், மாமனார் கொடுமையால் கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவர் செல்போனில் பதிவு செய்த உருக்கமான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, ஆயக்காரன்புலத்தை சேர்ந்தவர் சிவபாலன் (33). கூட்டுறவு கடன் சங்க தற்காலிக பணியாளர். வெளிநாடு சென்று விட்டு சொந்த ஊர் திரும்பியவர் மீண்டும் வெளிநாடு செல்லும் முயற்சி எடுத்து வருகிறார்.
இவரது மனைவி காவியா (20). காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீரா என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது. காவியாவின் மாமியார் செந்தமிழ்ச்செல்வி (52) தகட்டூர் கோவிந்தன்காடு அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை. மாமனார் பழனிதுரை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். காவியாவுக்கு மாமியார், மாமனார் கொடுமை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவபாலன், காவியாவை அருகில் உள்ள அவரது தாய் வீட்டில் விட்டு இருந்தார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த காவியா, நேற்றுமுன்தினம் இரவு வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் 6 மாத குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் செல்போனில் பேசிய ஆடியோ பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‘‘எனது கணவர் சிவபாலன் நல்ல மனிதர். ஆனால் எனது மாமியார், மாமனார் என்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.
தனியாக எனது குழந்தையை விட்டு செல்ல மனமில்லாததால் குழந்தையுடன் சேர்ந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’’ என்று பேசி இருந்தார். சமூக வலைதளத்தில் இந்த பதிவை பார்த்த உறவினர்கள் வாய்மேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அபோலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி குழந்தை மற்றும் காவியா உடல்களை மீட்டனர். இதுகுறித்து மாமியார் செந்தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மாமனார் பழனிதுரையை தேடி வருகின்றனர்.
