சமயபுரம். பிப்.5: மண்ணச்சநல்லூர் அருகே நெற்குப்பை கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு விவசாயிகள் விளக்கம் அளித்தனர். திருச்சி மாவட்டம் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தினேஷ், ராம்குமார், ரித்திஸ், ரூசோ அருள்ராஜ், சந்தோஷ், சிவா, சௌந்தர்யன், வைரமுத்த, விகாஷ், வினோத்குமார், விஸ்வநாதன் ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூரில் தங்கி விவசாயிகளின் வாழ்க்கை முறை மற்றும் பயிர் சாகுபடி முறைகள் பற்றியும் விவசாயிகளிடம் நேரடியாக சென்று தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து மண்ணச்சநல்லூர் வட்டம் நெற்குப்பை கிராமத்தில் உள்ள நெற்குப்பை விவசாயி சிவராஜை சந்தித்து அவரது பண்ணையில் உள்ள மீன் குட்டை பற்றியும் மீன் வளர்ப்பு மற்றும் குட்டையின் கரையில் மரங்களை வளர்த்து வருமானத்தை பெருக்கும் அவரது சிந்தனைகளை பற்றியும் கேட்டறிந்தனர். பின்னர் கூட்டு மீன் வளர்ப்பு, மீன் அமிலம் தயாரிக்கும் முறை, கரையில் வைக்க ஏற்ற மரங்கள் குறித்து விவசாயிகள் விளக்கம் அளித்தனர்.
