சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. சென்னையை சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற பட்டத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி டி-சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாக கூறி நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வர்த்தக ரீதியில் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எதிர்மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் தவறான முகவரி என்பதால் திரும்ப வந்துள்ளது. மின்னஞ்சல் மூலமாக நோட்டீஸ் அனுப்ப அனுமதிக்க வேண்டுமென்று கோரினார். மேலும், வழக்கு தொடர்பாக தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, எதிர்மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்ப அனுமதி தரப்படுகிறது. கமல்ஹாசன் தரப்பு விரும்பும்பட்சத்தில் மனு குறித்து செய்தித்தாள்களில் இன்னும் விரிவாக விளம்பரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
