×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் 2 நியமன உறுப்பினர்களை நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்பெற தேர்தல் குழுவுக்கு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் பார் கவுன்சில் தேர்தலை நடத்தும் தேர்தல் குழுவின் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பார் கவுன்சில் தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலை நடத்த அந்தந்த மாநிலங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் குழுவை நியமித்து உத்தரவிட்டது. உத்தரவில், தேர்தல் நடைபெறும் அனைத்து பார் கவுன்சில்களிலும் மொத்த உறுப்பினர்களில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இதில் 20 சதவீதம் தேர்தல் மூலமும் 10 சதவீதம் நியமனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மார்ச் 30ம் தேதி தேர்தல் என்று தேர்தல் நடத்தும் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் உத்தரவை அமல்படுத்துமாறு அகில இந்திய பார் கவுன்சில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு கடந்த டிசம்பர் 23ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் தேர்தெடுக்கப்படவுள்ள 25 உறுப்பினர்களில் 5 பெண்கள் தேர்தல் மூலமும், 2 பெண்கள் நியமனத்தின் மூலமும் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த உத்தரவு பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்றாலும் பெண்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற பார் கவுன்சில் விதிகளுக்கு முரணாக உள்ள இந்த பிரிவை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய பார் கவுன்சில் எந்த விளக்கத்தையும் பெறாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தேர்தல் நடைமுறையையும், பார் கவுன்சில்களின் நிர்வாகத்தில் தேவையற்ற தலையீட்டையும் ஏற்படுத்திவிடும். நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் நியமன உறுப்பினர்கள் தேர்வு நடைபெறுமா? இந்த நியமனத்தை யார் செய்வது?, தேர்தலையும், நியமனத்தையும் எப்படி ஒழுங்குபடுத்தவது? போன்ற குழப்பங்கள் உள்ளது. எனவே, இந்த குழப்பங்கள் குறித்த விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் பெற்று தேர்தலை நியாயமான முறையில் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu and Puducherry Bar Council ,Election Committee ,Supreme Court ,Chennai ,M. Velmurugan ,Bar Council ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED எடப்பாடி பழனிசாமி என்ன பொருளாதார...