×

புஞ்சை புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

 

 

சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தாசம்பாளையம் மொக்கை பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு கடந்த 1 வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இந்நிலையில் இன்று காலை 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி-பவானிசாகர் சாலையில் தாசம்பாளையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா தேவி மற்றும் புஞ்சை புளியம்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தற்போது தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடி செலவில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதால் சில இடங்களில் பழைய பைப்புகளை அகற்றிவிட்டு புதிய பைப் லைன்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதனால் குடிநீர் வினியோகம் அவ்வப்போது தடை செய்யப்படுவதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Punjai Puliampati ,Sathyamangalam ,Punjai Puliampatty ,Tasampalayam Mokai ,Bhavanisagar Uradachi Union ,Nallur Uratchi ,Erode District ,
× RELATED சாதிய பாகுபாடு பார்க்கக்கூடாது என்று...