நெல்லை, பிப். 2: நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் பரவல் நீடித்து வருகிறது. துபாயில் இருந்து நெல்லைக்கு திரும்பிய வாலிபருக்கு, முதலில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரே மாவட்டத்தில் கொரோனா பாதித்து முதல் நபராவார். தொடர்ந்து டெல்லியில் இருந்து திரும்பிய சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக கொரோனா பரவல் வேகம் எடுத்தது. மும்பையில் இருந்து நெல்லை மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட பலர் சொந்த ஊர்களுக்கு கொரோனாவுடன் திரும்பினர். தொடர்ந்து நாள் தவறாமல் மாவட்டத்தில் கொரோனா கண்டறியப்பட்டதுடன் மே, ஜூன் மாதங்களில் இந்த பரவல் உச்சத்தை தொட்டது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 600 முதல் 800க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் அரசு மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் பெற்றாலும் நோயாளிகள் இடம்பிடிக்க சிபாரிசு செய்யும் நிலை ஏற்பட்டது. அதேவேளை கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் அதிகரித்தன.