மன்னார்குடி, பிப்.2: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி இளஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா மார்ச் மாதம் துவங்க உள்ளது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வருடம்தோறும் இரண்டு முறை ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.