×

10ம் வகுப்பு மாணவிக்கு ‘பறக்கும் முத்தம்’ மூலம் உல்லாசத்திற்கு அழைப்பு; ஆயுதப்படை பெண் காவலரின் கணவன் போக்சோ சட்டத்தில் கைது

 

சென்னை: 10ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ‘பறக்கும் முத்தம்’ மூலம் உல்லாசத்திற்கு அழைத்த ஆயுதப்படை பெண் காவலரின் கணவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை தி.நகரை சேர்ந்தவர் புஷ்பா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், எனது மகள் அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு தினமும் செல்லும் போது, எதிர் வீட்டில் வசித்து வரும் பூபாலன்(33) என்பவர் சிரித்தும், பேசியும் வந்துள்ளார். மாணவியும் எதிர்வீட்டைச் சேர்ந்தவர் என்பதால் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று மாணவி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பூபாலன் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த மாணவியை பார்த்து கை அசைத்துள்ளார். இதை கவனித்த மாணவியும் பதிலுக்கு கையசைத்துள்ளார். உடனே பூபாலன் மாணவிக்கு ‘பறக்கும் முத்தம்’ கொடுத்து அதற்கு ரிப்ளே செய்ய கூறியுள்ளார். அதோடு இல்லாமல் மாணவிக்கு தொடர்ந்து பறக்கும் முத்தம் கொடுத்தப்படி, ‘உல்லாசத்திற்கும் அழைத்துள்ளார்’. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மாணவி அதிர்ச்சியடைந்து தன்னிடம் கூறி அழுதார். எனவே எனது மகளை பள்ளிக்கும் செல்லும் போது பின் தொடர்ந்து அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வரும் பூபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி மகளிர் போலீசார் பூபாலனை படித்து விசாரணை நடத்திய போது, பூபாலன் தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பணியாற்றி வருவதும், சென்னை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரை ஒரு வருடம் காதலித்து கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்ததும் தெரியவந்தது. தனது காதல் மனைவிக்கு தெரியாமல், 10ம் வகுப்பு மாணவிக்கு காதல் வலை விரித்து உல்லாசத்திற்கு அழைத்ததும் உறுதியானது. அதைதொடர்ந்து பெண் காவலரின் கணவன் பூபாலன் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.

பல மாதங்கள் பின் தொடர்ந்து தன்னை காதலித்து திருமணம் செய்த கணவன் போக்சோ சட்டத்தில் கைது ெசய்யப்பட்ட சம்பவத்தால் பெண் காவலர் மனமுடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Pushpa ,Chennai's ,T. Nagar.… ,
× RELATED சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் குட்கா விற்பனை செய்து வந்த 7 பேர் கைது