×

தோழமை கட்சிகளை அரவணைக்கும் அன்புக்கரமாக முதல்வர் இருக்கிறார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

 

பெரம்பூர்: தோழமை கட்சிகளை அரவணைக்கும் அன்புக்கரங்களாக தமிழக முதல்வர் இருக்கிறார் என வட சென்னை வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வின்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு இன்று காலை ஆய்வு செய்தார். முதலில் கொளத்தூர் அகரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கொளத்தூர் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை ஆய்வு செய்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக வெற்றிபெற வாய்ப்பு அதிகம் என்பது குறித்த கேள்விக்கு, உள்ளங்கை நெல்லிக்கனிபோல் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி நாயகன் சாதனைகள் நாள்தோறும் வளர்ந்த வண்ணம் உள்ளது. மக்களுடைய பேராதரவு திராவிட முன்னேற்றக்கழகத்தை நோக்கி நகர்ந்துகொண்டு உள்ளது. பல்வேறு தேர்தலில் பல்வேறு அலைகளை பார்த்திருப்பீர்கள். இந்த தேர்தல் ஸ்டாலின் அலையாகதான் தமிழகத்தில் இருக்கும்.

திமுகதான் டெல்லிக்கு அடிமையாக இருக்கிறது, காங்கிரசுடன் கூட்டணி நீடிக்குமா?, எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, மஞ்சள் காமாலை நோய் வந்தவர்களுக்கு கண்ணில் பட்டதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரி யும். கெஞ்சுவதும் கெஞ்சுவதும் யாதொன்றும் இல்லை, அஞ்சுவதும் அஞ்சத்தேவையும் இனி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்போதும் இல்லை. மக்களோடு நாங்கள் எப்போதும் இருக்கிறோம். திராவிட முன்னேற்றக்கழகத்துடன் தோழமையுடன் இருக்கும் கட்சிகளை அரவணைக்கும் அன்புக்கரங்களாக தமிழக முதலமைச்சர் இருக்கிறார், எதிர்பார்த்து காத்து கிடப்பவர்கள் இலவு காத்த கிளியாக மாறுவார்கள். தமிழக மக்களுக்கும், பிழைப்புக்காக தமிழகத்தை நாடி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு, எங்காவது ஓரிரு சம்பவங்கள் எதிர்பாராமல் நடக்கும் அசம்பா விதங்கள் சொந்த பிரச்னைகள், சொந்த காரணங்களுக்காக நடக்கும் அசம்பாவிதங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்தான் குற்றச்சாட்டாக இருக்கும்.

வருமுன் தடுப்பது ஒன்று வந்த பிறகு அதற்கான நடவடிக்கை எடுப்பது மற்றொன்று இரண்டையும் ஒருசேர ஒரு தராசு போல் பாவிக்கும் அரசு தமிழக அரசு. எந்த பகுதியிலும் எந்த மக்களும் துன்புறுத்தலுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காகத்தான் இனத்தால், மொழியால், மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் பாரதிய ஜனதாவை தமிழகத்தில் காலூன்றாத அளவிற்கு அதிதீவிர நடவடிக்கையை உறுதியோடு தமிழக முதலமைச்சர் எடுத்து வருகிறார், அனைத்து மக்களையும் காப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து கொளத்தூர் 70 அடி சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பெரவள்ளூர் காவல்நிலையத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதனையடுத்து, கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலையில் ராஜா தோட்டம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் அருகில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் ராஜா தோட்டம் பல்நோக்கு மையத்தை ஆய்வு செய்தார். பின்னர், கொளத்தூர் ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில் சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரிக்கரை பூங்காவையும் அமைச்சர் ஆய்வு செய்தார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Tags : Prime ,Minister ,P. K. ,Sekarpapu ,Perampur ,Development ,P. K. Sekarpapu ,Chennai Metropolitan Development Group ,
× RELATED தேர்தல் இலவசங்களுக்கு தடை விதிக்க...