×

இலவச உணவிற்கு அலைமோதிய கூட்டம்; விளம்பர யுக்தியை கையில் எடுத்த நடிகை: உணவகம் ஸ்தம்பித்ததால் நெட்டிசன்கள் கோபம்

மும்பை: குடியரசு தினத்தை முன்னிட்டு நடிகை ஷில்பா ஷெட்டி உணவகத்தில் வழங்கப்பட்ட இலவச காலை உணவிற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பை பாந்த்ரா பகுதியில் இயங்கி வந்த தனது ‘பாஸ்டியன்’ என்ற உணவகத்தை கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூடினார். தற்போது அதே இடத்தில் ‘அம்மா கை’ என்ற பெயரில் தென்னிந்திய மற்றும் மங்களூர் சுவைகளைக்கொண்ட புதிய உணவகத்தை தொடங்கியுள்ளார்.

இந்த உணவகத்தின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதலில் வருபவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உணவகம் திறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, காலை 7 மணி முதலே மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. பாந்த்ரா வீதிகளில் பல நூறு மீட்டர்களுக்கு நீண்ட வரிசை காணப்பட்டது. எதிர்பாராத மக்கள் கூட்டத்தால், இலவச சேவை மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், பலர் உணவு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் ‘இலவச கலாசாரம்’ குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரிசையில் நின்றவர்களில் பெரும்பாலானோர் வசதியானவர்கள் என்றும், அவர்களால் எளிதாக பணம் கொடுத்து சாப்பிட முடியும் என்றும் குறிப்பிட்டு பலரும் விமர்சித்தனர். இருப்பினும், இது ஒரு வெற்றிகரமான விளம்பர யுக்தி என்றும், இதில் பங்கேற்பதில் எந்தத் தவறும் இல்லை என்றும் மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.

Tags : Mumbai ,Shilpa Shetty ,Republic Day ,Bollywood ,Bastian ,Bandra ,
× RELATED சங்கராச்சாரியாரை கடுமையாக விமர்சித்த...