×

சிபிஐ வழக்குகளை வைத்து தலைவர்களை மிரட்டிப் பணிய வைக்கின்றனர்: என்டிஏ கூட்டணி குறித்து பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் புதுக்கோட்டையில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர் சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:நாம் யாருக்கும் எதற்கும் பயப்பட தேவையில்லை. தலைவர் எவ்வழியோ அவ்வழி தான் நானும். நம் கழகமும். தமிழ்நாட்டில் இருக்கிற பல கட்சிகளின் தலைவர்கள் மீது சிபிஐ வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்குகள், லஞ்ச ஊழல் வழக்கு என எல்லா வழக்குகளும் உள்ளது.

இதை பயன்படுத்தி ஆட்சியில் இருப்பவர்கள் மிரட்டி பணிய வைக்கின்றனர். அதிலிருந்து தேமுதிக என்கிற ஒரு கட்சி தான் விதிவிலக்கு. எந்த வழக்குக்கோ எந்த ஊழலுக்கோ எந்த வஞ்சகத்துக்கோ உருட்டல் மிரட்டலுக்கு அடிபணியாமல் நெஞ்சை நிமிர்த்தி தலைவர் வழியில் கம்பீரமாக பயணித்துக் கொண்டிருக்கிற ஒரே கட்சி தேமுதிக தான். இந்த கட்சி இறுதிவரை இப்படித்தான் இருக்கும். தேமுதிக வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறப்போவது உறுதி. இதை உங்கள் அண்ணியாக, அம்மாவாக இந்த இடத்தில் நான் கூறுகிறேன்.

2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறார்களோ அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். ஆட்சி அமைப்பது மட்டும் கிடையாது. தேமுதிகவிற்கு தேவையான அத்தனையும், உரிய மரியாதை, உரிய சீட்டு, உரிய பதவி, தருகிற கூட்டணியை தான் அமைப்பேன். தேர்தல் முடிவுகள் வரும் போது தேமுதிகவை சேர்ந்த பல பேர் வெற்றி பெற்று இருப்பீர்கள். அது முடிந்து மூன்றே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும். அந்த உள்ளாட்சி தேர்தலில் நமது கூட்டணியில் நமது தொண்டர்களுக்கு போட்டியிட உறுதியாக வாய்ப்பு வாங்கித் தரப்படும். அதில் அனைவரும் வெற்றி பெறப் போகிறீர்கள். இத்தனை ஆண்டு காலம் கட்சிக்காகவும், தலைவருக்காகவும் உழைத்த உங்களை பதவியில் உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம்’ என்றார்.

முன்னதாக தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் அவர் கூறுகையில், பிப்ரவரி 20ம் தேதிக்கு பிறகு தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுத்து உங்களை அழைத்து கட்சியின் தலைமை அலுவலகத்தில் அறிவிப்பேன். சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன். தேமுதிக கேப்டன் கட்சி. இங்கு யாரையும் மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என்றார்.

Tags : CBI ,Premalatha Bakir ,NDA ,Thoothukudi ,Secretary General ,Thuthukudi ,Thoothukudi district ,Pudukkota ,Booth Committee ,President ,
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்த பணியில்...