×

தாம்பரம்-மதுரவாயல் புறவழிச் சாலையில் ஆம்னி பேருந்து முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்தது: வெளிநாட்டு பயணிகள் உட்பட 20 காயம்

பல்லாவரம்: கேரளாவில் இருந்து 20 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஆம்னி பேருந்து ஒன்று, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. பேருந்தை கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டிச்சென்றார். இன்று காலை தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் திருநீர்மலை அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் முன்பக்க டயர் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தாறுமாறாக ஓடி, நடுவே இருந்த தடுப்பையும் தாண்டி எதிர்திசையில் சென்று கவிழ்ந்தது.

விபத்தில் பேருந்தில் இருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வலியால் அலறி துடித்தனர். அவ்வழியாக சென்ற சக வாகன ஓட்டிகள், களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்துப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக தாம்பரம்-மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய பகுதிகளுக்கு இடைப் பட்ட சாலையில் அடிக்கடி வாகனங்களின் டயர் வெடித்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக உள்ளது. மோசமான சாலை பராமரிப்பே இதுபோன்ற விபத்துக்கு காரணம் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : Tambaram- ,Maduravoyal ,Pallavaram ,Omni ,Kerala ,Chennai ,Koyambedu ,Suresh ,Thiruneermalai ,Tambaram-Maduravoyal ,
× RELATED மொழிப்போர் தியாகிகள்...