×

கறிக்கோழி வளர்ப்பு குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் தொழில்நுட்ப குழு அமைப்பு: கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்பு

சென்னை: கறிக்கோழி வளர்ப்பு குறித்து ஆய்வு செய்ய பேராசிரியர், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர், கால்நடை நோய் நுண்ணறிவுப் பிரிவு, வேளாண்மை துறை அலுவலர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வருடத்திற்கு சுமார் 50-55 கோடி கறிக்கோழி வகைக்கோழிகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏறத்தாழ 20,000 கறிக்கோழிப் பண்ணை உரிமையாளர்கள் உள்ளனர். மேலும், ஏறத்தாழ 66 ஒருங்கிணைப்பாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கறிக்கோழி உற்பத்திச் செலவு உள்ளிட்ட சிரமங்கள் குறித்து கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகள் வழங்கியதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் 29ம் தேதி மற்றும் 21 ஆகிய தேதிகளில் கால்நடை பராமரிப்பு இயக்குநர் நடத்திய கூட்டத்தில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களிடையே வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்படுகின்றனர். இவர்களுக்கிடையே உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் ஒப்பந்த விதிகளுக்குட்பட்டே தீர்வு காண முடியும் என சங்க நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கறிக்கோழி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீர்வு காணும் வகையில் பேராசிரியர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, உதவி இயக்குநர், கால்நடை நோய் நுண்ணறிவுப் பிரிவு, வேளாண்மை துறை அலுவலர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுடன் ஆலோசித்து உள்ளீடுகள், தரம் மற்றும் செலவு, உற்பத்திப் பெருக்கத்திற்கான வழிவகைகள், வளர்ப்புப் பணிகள் மற்றும் பண்ணைச் செயல்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், நோய்ப்பரவல் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் இடைவெளி, உற்பத்தி மற்றும் கொள்முதல் ஆகியவற்றிற்கிடையேயான பிரச்னை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து கறிக்கோழி வளர்ப்புத் தொழில் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Animal Husbandry Department ,Chennai ,
× RELATED வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த...