×

திருவள்ளூரில் வரும் 29ம்தேதி மதுவிலக்கு வழக்கில் கைப்பற்றப்பட்ட 44 வாகனங்கள் ஏலம்: எஸ்பி தகவல்

திருவள்ளூர், ஜன.21: திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்த சுக்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 44 வாகனங்களில், 38 மோட்டார் சைக்கிள்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்களை வரும் 29ம்தேதி காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 44 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முன்வைப்பு கட்டண தொகையாக மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.1000மும், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000மும் செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் மோட்டார் சைக்கிளுக்கு அரசு விற்பனை வரி 12 சதவிகிதம், 3 மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு 18 சதவிகிதம் உடனடியாக செலுத்தி விட வேண்டும்.

வாகனத்தின் விவரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டுத் தொகை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர்கள், உரிமையாளருக்கான பதிவு சான்று ஆர்.சி.புத்தகம், ஆதார் கார்டு கொண்டு வரவேண்டும். மேலும், பொது ஏலத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை தவறாமல் கொண்டு வரவேண்டும். ஏலத்தில் கலந்துகொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன்வைப்பு கட்டண தொகை ஏலத்தின் முடிவில் திருப்பி தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvallur ,Thiruvallur District Police ,SP ,Vivekananda Shukla ,Thiruvallur district ,
× RELATED அரசுக்கு சொந்தமான 6.2 கிரவுண்டு நிலம் மீட்பு