சென்னை: ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கே.சி. பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அதிமுகவில் போலி உறுப்பினர் சேர்க்கை செய்து பணம் வசூலித்ததாக குற்றம் சாட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தூண்டுதலில் பேரில் கட்சியின் சூலூர் ஒன்றிய செயலாளர் கந்தவேல் கடந்த 2020ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். 19 நாட்களுக்குப் பிறகு ஜாமினில் விடுதலையானேன்.
என் மீதான இந்த வழக்கை ரத்து செய்து 2024ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு பரப்பியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சூலூர் ஒன்றிய செயலாளர் கந்தவேல் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கும், கந்தவேலுவுக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி தனபால், பிப்ரவரி 13ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கும், கந்தவேலுவுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
