கூடலூர், ஜன.8: கூடலூரில் உடல்நல குறைவால் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கூடலூர் அருந்ததியர் ஓடை தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் (43). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தெய்வேந்திரனுக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சில தினங்களாக மனமுடைந்த நிலையில் இருந்த அவர், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிவிட்டு, நீண்ட நேரம் வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சசிகலா கதவைத் திறக்கும்படி தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அறைக்குள் சென்றார்.
அங்கு தேவேந்திரன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த கூடலூர் வடக்கு காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
