மதுரை, ஜன. 24: வீடு மற்றும் கட்டிட பணிகளுக்கும், கிரில் கேட் தயாரிப்பு உள்ளிட்ட ஒர்க்ஷாப் தொழில்களுக்கும் இரும்பின் தேவை முக்கியமாகும். சில வாரங்களுக்கு முன், டன் ஒன்றுக்கு ரூ.45 ஆயிரமாக இருந்த இரும்புக் கம்பியின் விலை, 10 நாட்களுக்கு முன், ரூ.62 ஆயிரமாக உயர்ந்தது. அதாவது டன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை விலை உயர்ந்தது. இரும்பு பைப் கிலோ ரூ.65ல் இருந்து ரூ.81 ஆக உயர்ந்தது. அதாவது டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், கட்டிடம் கட்டுவோர், கிரில்கேட் தயாரிப்போர், வெல்டிங் பட்டறை உள்ளிட்ட ஒர்க்ஷாப் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தென்மதுரை இரும்பு கிரில் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்க அவசரக்கூட்டம், மதுரை தெற்குவாசலில் உள்ள சங்க கட்டிடத்தில், தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் முனியாண்டி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இரும்பு விலை உயர்வால், கிரில் கம்பெனிகள் நஷ்டம் அடைந்துள்ளது. எனவே, மத்திய-மாநில அரசுகள் இரும்பு விலை உயர்வை கட்டுப்படுத்தி, நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.