×

பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு வீட்டு மனை பட்டா: முதல்வர் வீடியோ காலில் ஆறுதல்

 

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள நன்னிமங்கலத்தை சேர்ந்த சிவக்குமார்-சுமதி தம்பதி. இவர்களது மகள்கள் சுவாதி, ஸ்வேதா, மகன் சிவேஸ்வர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட சுமதி 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். டெய்லரான சிவக்குமாரும் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்தார். இதனால் 3 குழந்தைகளும் ஆதரவற்று தவித்தனர். உறவினர்கள் ஆதரவின்றி அப்பகுதியில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். அக்கம் பக்கத்தினர் அளிக்கும் உணவை சாப்பிட்டனர். இதில் சுவாதி, ஸ்வேதா கூத்தநால்லூர் அரசு பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். சிவேஸ்வர் அரசு உதவிபெறும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து கலெக்டர் மோகனசந்திரன் 3 குழந்தைகளையும் முதல்வரின் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் சேர்த்து 18 வயது வரை மாதம் 2000 வழங்க உத்தரவிட்டார். இந்த தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தொழில்முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வரத்தக துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, கலெக்டர் மோகனசந்திரன், எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் இன்று குழந்தைகளின் வீட்டுக்கு நேரில் சென்று அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கினர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போன் மூலம் நேரடியாக 3 குழந்தைகளிடம் வீடியோ காலில் பேசினார். நீங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம்.

அரசு உங்களை பார்த்துக்கொள்ளும். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும். இப்போது பட்டா கொடுத்துள்ளேன். இன்னும் 3 மாதத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டி தருவேன். உங்களது மேற்படிப்பை அரசு ஏற்கும் என்றார். இதையடுத்து 3 குழந்தைகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஆர்டிஓ யோகேஸ்வரன், மன்னை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமரேசன், கூத்தாநல்லூர் நகரமன்ற தலைவர் பாத்திமா பஷீரா, தாசில்தார் வசுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Shivakumar ,Sumathi ,Nunnimangala ,Koothanallur, Thiruvarur district ,Swati ,Shweta ,Shiveshwar ,Suhamhi ,Taylor ,Sivakumar ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,...