சிதம்பரம், டிச. 25: சிதம்பரம் அருகே மின் நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் மகன் அழகுராஜன்(45). இவர் சம்பவத்தன்று பைக்கில் தனது தந்தையை அழைத்து கொண்டு சிகிச்சைக்காக சிதம்பரம் எஸ்பி கோயில் தெருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று, அங்கு மருத்துவமனை முன் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது பைக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நகர காவல் நிலையத்தில் அழகு ராஜன் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் மருத்துவமனை முன் நிறுத்தியிருந்த அழகுராஜன் பைக்கை திருடிய காட்டுமன்னார்குடி அருகே உள்ள புத்தூர் சிவக்கம், சின்ன தெருவை சேர்ந்த கணேசன் மகன் கஜேந்திரன்(45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
