×

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகர்வு தமிழகத்தில் நாளை முதல் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியது. காலையில் பனி மூட்டம் காணப்பட்டது. ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், மதுரை, கோவை மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் பூமத்திய ரேகைப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அங்கிருந்து நகர்ந்து குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நேற்று நிலை கொண்டது. இருப்பினும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. ஓரிரு இடங்களில் பனி மூட்டம் நிலவியது. இன்றும் அதே நிலையும் நீடிக்கும்.

24ம் தேதி மற்றும் 25ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான பனி மூட்டம் காணப்படும். 26ம் தேதியில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவும், இதேநிலை 28ம் தேதி வரையில் நீடிக்கும். மேலும் 26ம் தேதி வரையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இது தவிர நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி இருக்கும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும்.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Erode ,Karur ,Nagapattinam ,Madurai ,Coimbatore… ,
× RELATED கனிமொழி எம்பி தலைமையில் திமுகவின்...