சிவகங்கை, ஜன.20: சிவகங்கை மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி அமைப்பாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் இருந்த நிலையில் 71 முதன்மை அங்கன்வாடி மைய பணியாளர், 45 குறு அங்கன்வாடி மைய பணியாளர், 108 அங்கன்வாடி மைய உதவியாளர் பணியிடங்களுக்கு மட்டும் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் விண்ணப்ப அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்கள் பணி நியமனம் செய்யப்படவில்லை. சத்துணவு, அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களிடம் ஆளும் கட்சி சார்பில் பணியிடத்திற்கு இவ்வளவு என குறிப்பிட தொகை நிர்ணயித்து வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரே பணியிடத்திற்கு பலரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆளும் கட்சியினரிடம் பணம் கொடுத்தவர்களில் தகுதியுள்ள குறைவான ஆட்களே நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.