திருப்புவனம், டிச.19: ஓட்டுனர் உரிமம் இன்றி டூவீலர் ஓட்டி வந்து விபத்தை ஏற்பத்தி சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான 17வயது சிறுவன் மற்றும் தந்தையை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காட்டை சேர்ந்த ராமர்-பிரியா தாம்பதியின் மகள்கள் தன்சிகா(5), காயத்ரி(5). இருவரும் நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது டூவீலரை ஓட்டி வந்த அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமிகளான தன்சிகா, காயத்ரி மீதும் மோதினார்.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சிறுமிகள் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலத்த காயமடைந்த தன்ஷிகா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் மீதும், அவரது தந்தை மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறுமிகளின் உறவினர்கள் திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் செய்தவர்களிடம் மானாமதுரை டி.எஸ்.பி பார்த்திபன் சமரச பேச்சு வார்த்தை நடத்தியதால் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
