தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா நிலையை உருவாக்க வேண்டும் சாலை பாதுகாப்பு விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி,ஜன.19: தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லா நிலையை உருவாக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் 32வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில் எஸ்பி ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மோட்டார் சைக்கிள் பேரணியில் போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்துகொண்டனர். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, 3ம் மைல், விவிடி சிக்னல் வழியாக குருஸ் பர்னாந்து சிலை அருகில் முடிவுற்றது.பின்னர் கலெக்டர் செந்தில் ராஜ் அளித்த பேட்டி:  சாலை பாதுகாப்பு விழா, சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற மையக்கருத்தில் அடிப்படையில் 18.01.2021 முதல் 17.02.2021 வரை ஒரு மாதம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழாவினையொட்டி போக்குவரத்துதுறை, காவல்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், கார் ஏஜென்டுகள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவினை துவக்கி வைக்கும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு விழாவையொட்டி ஹெல்மெட் அணிதல், சாலை விதிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு மாதம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை பின்பற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லா நிலையை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விநாயகம் (தூத்துக்குடி), நெடுஞ்செழியன் (கோவில்பட்டி), மோட்டார் ஆய்வாளர்கள் மாசிலாமணி, குமார், ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: