- எய்யூர் பஞ்சாயத்து
- முத்துப்பேட்டை
- உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை
- முத்துபேட்டை, திருவாரூர் மாவட்டம்
முத்துப்பேட்டை, டிச. 15: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சியில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச்சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படி முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சியில் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் ரம்ஜான் பேகம் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான மனுக்களை வழங்கினர். இதில் மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட்டது. இந்த முகாமில் மன்னார்குடி சரக துணை பதிவளாளர் வேணி, கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், இளநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்தி ரெகுநாதன், கிராம உதவியாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
