மும்பை: இண்டிகோ விமான சேவை பாதிப்பால் கட்டணம் பன்மடங்கு உயர்ந்த நிலையில், உள்நாட்டுப் பயணத்திற்கு ரூ.54 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியதாக நடிகை நிஹா ஷர்மா வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் இண்டிகோ விமான நிறுவனம் தனது விமானிகளின் பணி நேர விதிகளில் மாற்றங்களைச் சரியாகத் திட்டமிடாததால், போதிய ஊழியர்கள் இன்றி கடுமையான நிர்வாக நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர்.
இண்டிகோ சேவைகள் முடங்கியதால், பயணிகள் அவசரமாக மாற்று விமானங்களை நாடியதன் விளைவாக மற்ற விமான நிறுவனங்களின் டிக்கெட் தேவையும், கட்டணமும் தாறுமாறாக உயர்ந்தது. இந்நிலையில், கடைசி நேரத்தில் பயணம் செய்ய முயன்ற பிரபல சின்னத்திரை நடிகை நிஹா ஷர்மா, உள்நாட்டுப் பயணம் ஒன்றிற்காக வேறொரு விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். இதற்காக அவர் ரூ.54,000 கட்டணமாகச் செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், ‘விமானக் கட்டணம் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோல், பாடகர் ராகுல் வைத்யாவும் தனது இண்டிகோ விமானம் ரத்தானதால், குடும்பத்தினருடன் பயணிக்க வேறு வழியின்றி ரூ.4.2 லட்சம் செலவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பயணிகளின் இந்தக் கடும் அவதியைக் கருத்தில் கொண்ட ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்ததுடன், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுப் பணத்தையும் திரும்பத் தர வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
