×

போலி மருந்துகளை ஏற்றுமதி செய்து மோசடி; நைஜீரியர் உள்பட 6 பேர் கொண்ட சர்வதேச கும்பல் கைது: ரூ.23 கோடி பணப் பரிவர்த்தனைகள் அம்பலம்

அகமதாபாத்: போலி ஏற்றுமதி மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய நைஜீரியர் உள்ளிட்ட சர்வதேச கும்பலை அகமதாபாத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை, ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம கும்பல், ஆப்பிரிக்காவில் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் ‘எப்பர்டோரியம் மெர்கோலா’ என்ற ஹோமியோபதி மருந்துக்கு அதிக தேவை இருப்பதாகவும், அதனை ஏற்றுமதி செய்தால் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளது.

இதனை நம்பிய தொழிலதிபரிடம், தாங்கள் குறிப்பிடும் உள்ளூர் விநியோகஸ்தரிடம் இருந்து மருந்தின் மாதிரியை வாங்கி, டெல்லியில் உள்ள தங்களது ‘ஆப்பிரிக்க ஆய்வக விஞ்ஞானியிடம்’ கொடுத்து தரம் சரிபார்க்குமாறு கூறியுள்ளனர். அனுப்பப்பட்ட மாதிரிக்கு ஒப்புதல் கிடைத்ததும், பெரிய அளவில் மருந்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். இதை நம்பிய தொழிலதிபர், முன்பணமாக ரூ.32 லட்சத்திற்கும் அதிகமான தொகையை, மோசடிக் கும்பல் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளார்.

பணத்தைப் பெற்ற பிறகு அந்தக் கும்பலிடம் இருந்து எந்தத் தகவலும் வராததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர், அகமதாபாத் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் தீவிர விசாரணை நடத்தி, இந்த மோசடியின் பின்னணியில் உள்ள நைஜீரிய நாட்டவரான மடுபோர் ஸ்டீவ் உசோச்சி, உள்ளூர் மூளையாகச் செயல்பட்ட சலீம் அன்வருதீன் ஷேக், கிருஷ்ணமதி மகேஷ் சவுத்ரி, மகேஷ் விஸ்ராம் சவுத்ரி, திரிஜுகிலால் புத்ராம் குர்மி மற்றும் ராஜேஷ்குமார் பிரித்விபால் சரோஜ் ஆகிய ஆறு பேரைக் கைது செய்தனர்.

மும்பை, பெங்களூரு, ஜாம்நகர் என பல மாநிலங்களில் பதுங்கியிருந்த இவர்களைப் போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்கள், மோசடிப் பணத்தை நாடு முழுவதும் உள்ள போலியான மற்றும் வாடகை வங்கிக் கணக்குகளுக்குப் பலமுறை மாற்றி, இறுதியாக நைஜீரிய சைபர் நெட்வொர்க்கிற்கு அனுப்பி, தடயங்களை அழித்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்குகளில் மட்டும் ரூ.23.23 கோடிக்கும் அதிகமான மோசடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களது வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Ahmedabad ,Ahmedabad Cyber Crime Police ,Ahmedabad, Gujarat ,
× RELATED அசாமில் தேயிலை தோட்டத்திற்கு சென்ற...