சாயல்குடி, ஜன.1:ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், பள்ளமோர்க்குளம், ராமேஸ்வரம், கடலாடி, சாயல்குடி பகுதியில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது. இப்பகுதியில் 205.30 மில்லி மீட்டர் மழை பதிவானது. இந்நிலையில் சாயல்குடியில் கனமழை பெய்தது. இதனால் மாதா ஆலய தெருவிலுள்ள விநாயகர்கோயில் குளம் நிரம்பியது. பழைய பாசி படர்ந்து கிடந்த தண்ணீர், கழிவுநீர் கால்வாய் பகுதியில் தேங்கி கிடந்த கழிவுநீர் ஆகியவை மழைநீருடன் கலந்து அப்பகுதியிலிருக்கும் குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்தது.இதுபோன்று சாயல்குடி பேருந்து நிலையம் அருகே அங்கன்வாடி மையம் உள்ளது. மயானம், ஆடு, கோழி இறைச்சி, கழிவுநீர், குப்பைகள் கலந்த மழைநீர் அங்கன்வாடி மையத்திற்கு புகுந்தது. இதனை மையத்தின் உதவியாளர் பாத்திரம் கொண்டு வெளியேற்றினார், தண்ணீர் நிரம்பி வழிவதால் வெளியேற்ற முடியாமல் பரிதவிக்கின்றனர். மேலும் அண்ணாநகர், குடிசைமாற்று வாரியம் குடியிருப்பு, தரைக்குடி சாரையோர குடியிருப்பு, சீனி ஆபிஸ் தெரு, வி.வி.ஆர் நகர் உள்ளிட்ட குடியிருப்புகளை கழிவுநீர் கலந்து மழைநீர் சூழ்ந்து கிடக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான பொதுமக்கள் இந்த சுகாதாரமற்ற தண்ணீரில் நடந்து செல்வதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது.