புதுக்கோட்டை, டிச.31: திருவரங்குளம் சிவன்கோயிலில் நடந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் சன்னதியில் எழுந்தருளியுள்ள நடராஜர் சிவகாமி அம்பாளுக்கு பால் பழங்கள் பன்னீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சாமி அம்பாளுக்கு பட்டாடை அணிவித்து மலர் அலங்காரம் செய்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஆருத்ரா தரிசன விழாவை கொண்டாடி மகா தீபம் காட்டப்பட்டது. புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பழங்கள், இளநீர், சந்தனம் விபூதி, அரிசி மாவு, மஞ்சள், திரவியம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் செய்யப்பட்டன. பின்னர் நடராஜர் வெள்ளி அங்கி மலர் அலங்காரத்தில் சிவகாமி அம்பாள் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகிலுள்ள வேட்டைப்பெருமாள் கோயிலில் மார்கழி மாத திருவாதிரையையொட்டி சிறப்பு ருத்ரஹோமம் சந்தோஷ்சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றது.