காவிரி குடிநீரின்றி மக்கள் அவதி

கீழக்கரை, டிச.29:  கீழக்கரையில் 21 வார்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் பெரும்பாலானவர்கள் வீடுகளுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. தற்போது கீழக்கரை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது குடிநீர் பைப்புகளில் பெரும்பாலானவற்றில் குடிநீர் வருவதில்லை என பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். இதனால் ஏழை எளிய மக்கள் குடிநீருக்கு பெரும் அவதியடைந்து வருகின்றனர். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முகைதீன் காதர் சாகிபு கூறியதாவது, கடந்த நகராட்சி நிர்வாகத்தின் போது குடிநீர் வினியோகம் சீராக செய்வதற்காக ரூ.5 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது குடிநீர் வினியோகம் சீராக இல்லை. அதுமட்டுமில்லாமல் பொது குடிநீர் குழாய்களில் குடிநீர் சப்ளை இல்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் இல்லை. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: