விருதுநகரில் ஏடிஎம் மிஷினில் சிக்கும் வாடிக்கையாளர் பணம் கணக்கில் கழிவதால் அச்சம்

விருதுநகர்,டிச.26: விருதுநகர் எம்ஜிஆர் சிலையருகே உள்ள எஸ்பிஐ வங்கி கிளையின் முன்பகுதியில் அதே வங்கிக்கு 3 ஏடிஎம் மிஷின்கள் ஒரு அறையில் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் நேற்று காலை பணம் எடுக்க சென்றவர்களின் பணம் வெளியே வராமல் மிஷினிலேயே சிக்கி கொண்டது. ஆனால் வாடிக்கையாளர்களின் கணக்கில் பணம் கழித்து குறுந்தகவல் வந்ததுள்ளது.  நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளார் மாரிமுத்து தனது கணக்கில் ரூ.20 ஆயிரத்தை எடுக்க முயன்ற போது மிஷினில் இருந்து ரூ.8,500 மட்டும் வெளியே எடுக்க முடிந்துள்ளது. மீதிபணம் ரூ.11,500 வெளியே வராமல் சிக்கி நின்றுள்ளது. பணம் வெளியே வராமல் சிக்கியதை தொடர்ந்து பஜார் போலீசாருக்கும் தகவல் தெரித்தார்.  போலீசார் வந்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி மேலாளரும் திங்கட்கிழமை வங்கி வந்து கடிதம் எழுதிதரும்படி தெரிவித்தார்.

மாரிமுத்து கூறுகையில், கணக்கில் இருந்து அவசர செலவிற்கு ரூ.20 ஆயிரம் எடுக்க முயன்று, ரூ.8,500 வெளியே வந்த நிலையில், ரூ.11,500 சிக்கி கொண்டு வெளியே வரவில்லை. மேலும் வங்கி கணக்கில் கழித்து தகவல் வந்துள்ளது. சிக்கிய பணம் கிடைக்குமா, இல்லையா என்ற தகவல் பெற முடியவில்லை. பல அரசுடமை வங்கி ஏடிஎம்களில் காவலாளிகள் இல்லை. பிரச்சனை என்றால் யாருக்கு புகார் தெரிவிக்க வேண்டுமென்ற தகவலும் இல்லை. ஏடிஎம் மையத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டால் முறையான பதில் இல்லை. மேலும் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகளை தனியாருக்கு விட்டு இருப்பதால் வங்கிகளும்  பதில் அளிப்பதில்லை. 3 தினங்கள் அரசு விடுமுறை என்பதால் காத்திருந்து, திங்கட்கிழமை வங்கியில் எழுதி கொடுத்து பணம் கணக்கில் வரவாக எத்தனை நாட்கள் ஆகுமென்பது தெரியவில்லை என்றார்.

Related Stories: