பழநி பங்குனி உத்திர திருவிழாவில் அன்னதானம் வழங்கும் மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

பழநி, ஏப். 5: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்ட அன்னதான மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி உத்திரம். இவ்விழா கடந்த மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு வந்திருந்தனர். இவர்களுக்கு வழிநெடுகிலும் பல்வேறு சமூக மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கலைவாணி தலைமையில் பழநி வட்டார உணவுப்பொருள் பாதுகாப்பு அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் அன்னதானம் வழங்கும் மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு உணவு தயாரிக்க பயன்படும் காய்கறிகள், மளிகை பொருட்கள், எண்ணெயின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கையுறை மற்றும் தலையுறைகள் அணிந்து உணவுகளை சமைக்க வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறங்களை உணவுகளில் சேர்க்க கூடாது. உணவு விநியோகிக்கப்பவர்கள் சுகாதாரமான உடைகள் மற்றும் கையுறைகள் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

The post பழநி பங்குனி உத்திர திருவிழாவில் அன்னதானம் வழங்கும் மையங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: