நெல்லை,ஏப். 5: நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கோயில் செயல் அலுவலருக்கு செங்கோல் வழங்கும் வைபவம் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தென் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் உள்வீதியுலா நடந்தது.
4ம் திருவிழாவையொட்டி மார்ச் 29ம் தேதி மூங்கில் காட்டில் ராமகோனுக்கு சுவாமி நெல்லையப்பர் தோன்றி காட்சி கொடுத்த வரலாற்று நிகழ்வும், அதைத்தொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதியுலாவும் நடந்தது.
தொடர்ந்து 10ம் திருவிழாவான நேற்று (4ம் தேதி) காலை பங்குனி உத்திர சிறப்பு ஹோமம், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டி நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் அய்யர் சிவமணிக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. மேலும் தக்கார் கவிதாவுக்கு சுவாமியின் திருப்பாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அறநிலையத்துறையினர் மண்டபத்தை மூன்று முறை வலம்வந்தனர். இதில் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.The post நெல்லையப்பர் கோயில்