பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

டெல்லி: பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயண வசதி, கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனோ பெருந்தொற்றுக்கு முன்னர் 10,186 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது நாடு முழுவதும் 10,748 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஆண்டுக்கு 800 கோடி பேர் பயணிக்கின்றனர். இது அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடியாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் போதுமானதாக இல்லை என மக்கள் தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. எனவே ரயிலில் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியல் நிலையிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் இருக்கின்றன. ரயில்களில் காத்திருப்புப் பட்டியலைத் தவிர்த்து அனைவருக்கும் இருக்கைகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறி வந்தது. இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மேலும் காத்திருப்புப் பட்டியல் டிக்கெட்டுகளை உறுதி செய்யவும் இன்னும் அதிகமானோர் ரயில்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கவும் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் 3,000 புதிய எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலமாக 2027-28ம் ஆண்டில் அனைத்து பயணிகளுக்கும் பயணிப்பதற்கான டிக்கெட் உறுதி செய்யப்படும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் மக்களின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பயணிகள் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 3,000 புதிய ரயில்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: