அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்குவதற்கு தடை விதிக்க முடியாது : ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை, :  அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்குவதை வரும் தேர்தலில் தடை விதிக்க முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு குறித்து தேர்தலுக்கு பிறகு தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில்   தாக்கல் செய்யப்பட்டுள் பொதுநல மனுவில், ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 14 பேர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 12 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில், அந்த கட்சியில் உறுப்பினராக  உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் போட்டியிட முடியாது.இருப்பினும், கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்காமல் தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்களை, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் சின்னம் ஒதுக்கும் நடைமுறைகள் முடிவடைந்துவிட்டதால், மனுதாரரின் கோரிக்கை குறித்து இந்த தேர்தலுக்குள் முடிவெடுப்பது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து தேர்தல் முடிந்தபிறகு, வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: