நாகை, மார்ச்19: கொரோனா வைரஸ் பாதிப்பால் நாகையில் சாகுபடி செய்த வெள்ளரிக்காய் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டம் தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், பரவை, பூவைத்தேடி, காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. நான்கு மாத பயிரான இதற்கு பராமரிப்பு செலவு என்பது குறைவானது ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் பயிரியிட்டு தற்பொழுது மகசூல் தருகிறது. விவசாயிகள் வெள்ளரியை அறுவடை செய்து விற்பனை செய்யும் சீசன் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் நாகை அருகே உள்ள பரவை சந்தையில் இருந்து வெள்ளரிக்காயை வாங்கி கோயம்பேடு, மன்னார்குடி, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எடுத்து சென்று அங்குள்ள உள்ள சந்தைகளில் விற்பனை செய்வார்கள். இதனால் நாகை மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் வெள்ளரிக்காய்களுக்கு எப்பொழுதும் நல்ல விலை கிடைக்கும்.