சென்னை: வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலம் குழந்தைகளுக்கு செலுத்திய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி மாணவ, மாணவிகளை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கும் வகையில், மருந்து சீட்டு இல்லாமல், வலி நிவாரண மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்கப்படுவது வேதனையளிக்கிறது.போதை தரும் மருந்துகளை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது எத்தனை வழக்குகள் பதிய செய்யப்பட்டுள்ளன? சம்பந்தப்பட்ட மருத்துகடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதா? எத்தனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன? இதுபோல் போதைக்கு அடிமையான மாணவர்கள் எத்தனை சதவீதம் பேர்? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, இது குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.