மே 18ம் தேதிக்கு பிறகு பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் இல்லை: தலைமைச் செயலாளர் அரசாணை

சென்னை: ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பை முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 முதல் மே 17 வரை பணிக்கு வராத அரசு ஊழியர்கள், பணிக்கு வந்ததாக கருதப்படுவர். மே 18-ம் தேதிக்குப் பின் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் செயல்பட்ட போது, குறைந்த பட்ச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டும், பணிக்கு வரவில்லையென்றால் அது விடுப்பாகவே கருதப்படும். மே 18-ம் தேதிக்குப் பின் விடுப்பில் இருந்த ஊழியர்கள் அதற்கான விடுமுறை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.

கொரோனா அல்லாத வேறு வகையான மருத்துவ காரணங்களுக்காக யாரேனும் விடுப்பு எடுத்திருந்தால் அதற்கான மருத்துவச் சான்றை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். கொரோனா அறிகுறி இருந்து விடுப்பில் இருந்தாலோ, அல்லது குடும்பத்தினரில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு பகுதியில் வசித்தாலோ அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்தால் அது ஊதியப் பிடித்தம் இல்லாத சிறப்பு விடுப்பாக கருதப்படும். கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரவில்லையென்றாலும் அது பணிக்காலமாகவே கருதப்படும். தமிழக அரசின் அனைத்து வகை ஊழியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு இது பொருந்தும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: