புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் உடல்கள் திருச்சி வந்தது; நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் அஞ்சலி

திருச்சி: புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரின் உடல்கள் டெல்லியில் இருந்த தனி விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டுள்ளன. அவர்களது உடலுக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இருவரின் உடல்களும் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழக வீரர்களுடன் கர்நாடகம், கேரளாவை சேர்ந்த வீரர்கள் உடல்களும் திருச்சி வந்தன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்றுமுன் நடந்த தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 41 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் சுப்பிரமணியன்(28) தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி - மருதம்மாள் தம்பதியரின் மகன். சுப்பிரமணியனின் தந்தை கணபதி விவசாயி. சுப்பிரமணியன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்தார். சென்னை உள்ளிட்ட இடங்களில் பணியாற்றிய அவர், தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு கிருஷ்ணவேணி (23) என்ற மனைவி இருக்கிறார். குழந்தையில்லை. பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த சுப்பிரமணியன் கடந்த 10ம் தேதி ஊரில் இருந்து காஷ்மீருக்கு சென்றுள்ளார். இந்நிலையில்தான், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுப்பிரமணியன் பலியாகி உள்ளார். அவரது உயிரிழப்பு குறித்து தகவலறிந்ததும் பெற்றோர் மற்றும் மனைவி கிருஷ்ணவேணி,  உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து தூத்துக்குடி எஸ்.பி.முரளி ராம்பா, கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் ஆகியோர் சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா கார்குடி கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் சின்னையன் (60). விவசாயி. இவரது மனைவி தாய் சிங்காரவள்ளி (55). இவர்களது மகன் சிவச்சந்திரன் (33). எம்.ஏ.,பி.எட். பட்டதாரியான இவர், கடந்த 2010ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரராக சேர்ந்தார். 2014ல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு, டிப்ளமோ நர்சிங் படித்த காந்திமதி (27) என்ற மனைவியும் சிவமுனியன் (2) என்ற மகனும் உள்ளனர். காந்திமதி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  சிவசந்திரன் வீரமரணம் அடைந்த தகவலறிந்தும், இவரது மனைவி மற்றும் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: