நாகதோஷத்தை போக்கும் திருமுருகன்பூண்டி!

கொங்கு நாட்டின் பாடல் பெற்ற தலங்களில் திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர் கோயில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பது தொன் நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவவழிபாடு செய்த பெருமைக்கு உரியது. மங்களாம்பிகையுடன்  மாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.

இத்திருக்கோயிலில் முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபமும், சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம், இடப்புறத்தில் ஞானதீர்த்தம், வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முருகன் ஈசனை வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சந்நதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது.

சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நதிகள் அமைந்துள்ளன. மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசுவரர் எனப் பெயர் பெற்றார். துர்வாசர் கற்பகஉலகிலிருந்து மாதவி மரத்தை இங்குக் கொண்டு வந்ததால், இத்தலம் மாதவி வனம் என்ற பெயரும் பெற்றுள்ளது.

கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நதி உள்ளது.  இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் வேடுவர் உருவமும், சுந்தரர்  உருவமும்  உள்ளன. கோயில் பிராகாரத்தில் பைரவர்  சந்நதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நிதி  சிறப்பானது. இத்தலம் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி,  சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாள்கள்  இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம்.

இங்குள்ள பிரம்மதாண்டவ நடராஜர்  சந்நதி விசேஷமானது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, மண்டபத்தின் மேலே பெரிய நந்தி,  ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயச் சுவற்றில்  நிருதி விநாயகர், கேது ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இறைவனுக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். மாசி மாதத்தில் 11 நாட்கள் நடை பெறும் விழா சிறப்பானது.

இங்குள்ள வேடன் மற்றும் சுந்தரர் திரு உருவங்களுக்கு ஒரு புராண கதைஉள்ளது. ஒரு முறை சுந்தரர் நாயனார் தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய ஈசன், தமது திருவிளையாடலை துவக்கினார். சுந்தரர் சென்ற பாதையில் வேடன் வடிவில் வந்த பெருமான், அவரிடம் இருந்த செல்வங்களை அபகரித்துச் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமும், வேதனையும் அடைந்த சுந்தரர், இந்தத் தலத்திற்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட... இறைவன் அவர் முன் தோன்றி, அவரின் பாடல்களை கேட்பதற்காகவே வேடன் வேடம் பூண்டு வந்ததாக கூறி, அவர் பறிகொடுத்த செல்வங்களை அவரிடமே கொடுத்ததாக புராணங்களில் உள்ளன. அதன் நினைவாகத்தான் இங்கு வேடன் மற்றும் சுந்தரரின் உருவங்கள் இத்தலத்தில் பிரதிஷ்டைப் பெற்றுள்ளது.

சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இது குறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை,  தட்சிணாமூர்த்தி, சூரிய - சந்திரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.

கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

நாகதோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்லன அனைத்தும் நிறைவேற, திருமுருகன்பூண்டி சென்று இறைவனைத் தரிசித்து திருவருள் பெற்று வாருங்கள். திருப்பூர் ரயில்நிலையத்துக்கு வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் எல்லா பேருந்துகளும் திருமுருகன்பூண்டியில் நிற்கும்.

தொகுப்பு: மகி

Related Stories: