யாவும் அருளும் யாதகிரியான்

நலம் தரும் நரசிம்மர் தரிசனம் 15

தற்போது தெலுங்கானா என்று அறியப்படும் மாநிலத்தில், நல்கோண்டா மாவட்டத்தில், ஹைதராபாத்திலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில், போங்கீர் என்னும் ஊருக்குச் சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது யாதகிரி குட்டா என்ற ஊர். இங்கு இருக்கும் மலையில் அமைந்துள்ள லஷ்மி நரசிம்மர் ஆலயம் மிகப் பழமையானது; இதிகாசங்களுடன் தொடர்புடையது. பாரத தேசமெங்கும் பரவியுள்ள நரசிம்ம ஆலயங்களில் இது குறிப்பிடத்தக்கது.. பதினெட்டு புராணங்களில் ஒன்றான ஸ்காந்த புராணத்தில் இந்த கோயிலைப் பற்றிய தகவல்கள் உள்ளது. யாதகிரி நரசிம்மர் கோயில் தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்மர் கோயில் ஆகும்.

புராணக்கதையின்படி நாராயணர் யாத ரிஷியின் தவத்தால் மகிழ்ந்து ஹனுமனை அனுப்பி முனிவருக்கு புனித இடத்தை காட்டியதாகவும் அங்கு இறைவன் லட்சுமி நரசிம்மர் வடிவில் முனிவர் முன் தோன்றியதாகவும் உள்ளது. அந்த இடம் இப்போதுள்ள கோயிலில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு முனிவர் பல காலங்கள் இறைவனை வழிபட்டுள்ளார். முனிவரின் முக்திக்கு பிறகு அங்குள்ள மக்கள் இறைவனைப் பற்றி அறிந்து அவரை வழிபட்டனர். ஆனால் மக்களின் முறையற்ற வழிபாட்டின் காரணமாக லட்சுமி நரசிம்மர் மலைக்குள் சென்று விட்டார்.

மக்கள் பல நாட்கள் இறைவனை தேடினார்கள். பல ஆண்டுகள் கழித்து ஒரு பக்தையின் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தைக் காட்டினார். அங்கு அவர்கள் சென்ற போது இறைவன் அவரின் ஐந்து உயரிய அவதாரங்களால் காட்சியளித்தார்.ஜ்வாலா நரசிம்மர், யோக நரசிம்மர், கண்ட பேருண்ட நரசிம்மர், உக்ர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் ஆகிய ஐந்து வடிவங்களில் நரசிம்மர் காட்சி தந்தமையால், இது பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் என்று அறியப்படுகிறது. இந்த குடவரைக் ஆலயத்திலுள்ள கருவறை உச்சத்தில் உள்ள விமானம் விஷ்ணுவின் கையில் உள்ள தங்க சுதர்ஸன சக்கரம் ஆகும் (3 அடி X 3அடி ). கோயில் அலங்காரங்களை 6 கி.மீ தொலைவில் இருந்தே  தரிசிக்கலாம். பல வருடங்களுக்கு முன்  இந்த ஸுதர்சன சக்கரம் பக்தர்களுக்கு வழிகாட்டி போல் செயற்பட்டுள்ளது. இந்த கோவில் பல ரிஷிகளால் வழிபட்டுள்ளதால் ரிஷி ஆராதன க்ஷேத்திரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு  உள்ளது.

இங்குள்ள நரசிம்மர் பக்தர்களுக்கு உள்ள தீராத நோயை தீர்ப்பதால் வைத்திய நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். அதைப்போல் தீய சக்திகளாலும், தீய கிரகங்களாலும் பிடிக்கப் பட்டவர்களின் துன்பங்களை அகற்றி, காப்பாற்றி நல்வழி படுத்துபவராகவும் விளங்குகிறார். பல சமயங்களில் பக்தர்களின் கனவுகளில் நரசிம்மர் தோன்றி அவர்களுக்கு தேவையான மருத்துவ முலிகைகளை தருவதும், பக்தர்களின் நோயை தீர்ப்பதும், அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லாசியும் வழங்குகிறார். ஒரு மண்டல (48 நாள்) விரத முறை மிக விசேஷமானது. இங்கு ஆராதனைகளும், பூஜைகளும் பாஞ்சராத்திரம் நெறிகளின்படி பின்பற்றப்படுகிறது.

திரேதா யுகத்தில், ருஷ்யசிருங்கரின் மகனான யாத மகரிஷி இங்கு தவம் செய்கையில் அவருக்குப் பிரத்யட்சமான அனுமன் அவரது வேண்டுகோளின்படி அவருக்கு நரசிம்மரின் திருக்கோலம் காணும் பாக்கியத்தை அருளினார். புராண யாதகிரி நரசிம்மர் கோயில் புதிய யாதகிரி நரசிம்மர் கோவில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. புராண யாதகிரி நரசிம்மர் கோயிலில் இரண்டு அதிசயங்கள் உள்ளன, ஒன்று ஹனுமானின் கால் அடி தடம் மற்றொன்று அங்கு உள்ள தெப்பகுளம். இப்போதும் மாற்றம் அடையாது இருப்பது. அதே மாதிரி இங்கு உள்ள தெப்பத்தில் தண்ணீர் வற்றாமல் இருப்பது.

சகல மனக்கிலேசங்களையும், அச்சங்களையும் அகற்ற வல்லவர் நரசிம்மர். இங்கு ஒரு மண்டல காலம் தங்கித் தொழுதால் மனப்பிணிகள் அகன்று விடும் என்பது நம்பிக்கை. இங்கு வந்து தொழுவோருக்கு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அகன்று விடும் என்பதும் நம்பிக்கை.உத்தியோகம், உத்தியோகத்தில் உயர்வு, மகப்பேறு ஆகியவற்றிற்காவும் இத்தலம் பெயர் பெற்றுள்ளது. சகல பிணிகளையும் போக்கும் இந்த நரசிம்மரை வைத்திய நரசிம்மர் என்றே அழைக்கிறார்கள். நரகத்தின் நெருப்பாக நாற்புறமும் எனைச்சூழ்ந்து உரோமங்கள் ஒவ்வொன்றும் எரிக்கும்தீக் கங்காய்சம் சாரத்தில் நான்சிக்கித் தழும்பேற அங்கம்தா மரைபோலும் மாயவனுன் செங்காலிற் சரணடைந்தேன்! கரந்தூக்கி விட்டென்னைக் காத்திடுவாய் நரசிங்கா!  ஓம் நரசிம்மாய நமஹ! (தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்

Related Stories: